தமிழக விவசாயிகள் போராட்டத்தால் கர்நாடகாவுக்கு கெட்ட பெயராம்.. 'அலர்ட்' செய்யும் தேவகவுடா
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், கர்நாடகாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவது கர்நாடகாவை மோசமாக சித்தரிக்கும் வகையிலுள்ளது என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடா குற்றம்சாட்டினார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அவர்களுடையது.
முதலில் இவர்களை பிரமுகர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழ் மீடியாக்களின் தொடர்ச்சியான செய்திகளால் திரையுலகமும், அதைத் தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்களும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். உதவி செய்வதாக உறுதியளித்தனர்.
கெட்ட பெயர்
இந்நிலையில், தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், கர்நாடகாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகா தண்ணீர் தராமல்தான் காவிரி டெல்டாவில் தமிழக விவசாயிகள் கஷ்டப்படுவதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கவும் தண்ணீர் இல்லை. ஆனால் இது வெளியுலகிற்கு தெரியாது. தமிழக விவசாயிகள் போராட்டத்தால் தேசிய ஊடகங்களிலும் கர்நாடகா குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசியல்
தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை கிளப்பியுள்ளனர். ஆனால் கர்நாடக எம்.பிக்கள் எதையும் செய்யவில்லை. இப்படி அரசியல் ரீதியாக கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் சிறப்பாக காய் நகர்த்தி வருகிறது. இதற்கு கர்நாடகாவும், விவசாயிகளும் பலியாகிவிடக்கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம்
தமிழக விவசாயிகள் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. அரசியல் நெருக்கடி கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாடாகும்.
அக்கறையில்லை
கர்நாடகாவில் ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும், இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டுள்ளன. விவசாயிகள் நலனை இக்கட்சிகள் பார்க்க வேண்டும். கர்நாடக மக்களை காப்பாற்ற கர்நாடக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திற்கு 3 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று கர்நாடக அதிகாரிகள் அடங்கிய குழு, கர்நாடக தலைமைச் செயலரை நேரில் சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளது.