ஏழுகொண்டலவாடா.. இப்படி செல்லாத நோட்டா உண்டியல்ல போட்றாங்களே கோவிந்தா!
திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் ஒரே நாளில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் ஒரே நாளில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கொடுத்து புதிய நோட்டுகளை குறிப்பிட்ட தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியலில் அந்த நோட்டுகளை பக்தர்கள் போட்டு வருகின்றனர்.
அவ்வாறு கடந்த மாதம் வரை பக்தர்கள் செலுத்திய ரூ.12.7 கோடி பணத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் படாதபாடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம் நேற்று எண்ணப்பட்டது.
அப்போது ரூ.2.55 கோடியில் ரூ. 7 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே உள்ள ரூ.12.7 கோடியுடன் இந்த ரூ. 7 லட்சத்தையும் சேர்த்து ரூ.13.4 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பு வைத்துள்ளனர். பணக்கார கடவுளான வெங்கடாஜலபதிக்கு வந்த சோதனையால் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் அவதிப்பட்டு வருகிறது.
கோவிந்தனுக்கு இப்படி ஒரு சோதனையா!