சம்பவத்திற்குப் பின் வீட்டை விட்டே வெளியேறவில்லை: உபேர் டிரைவரால் சீரழிக்கப்பட்ட பெண் கண்ணீர்
மெயின்புரி: டெல்லியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உபேர் கால்டாக்ஸி டிரைவர் ஷிவ்குமார் யாதவ், கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறையில் இருந்தவன். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவன், மீண்டும் பணியில் சேர்ந்து தனது கொடூர புத்தியை வெளிப்படுத்தியுள்ளான்.
அவன் கைது செய்யப்பட்டதை மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராம் நகரைச் சேர்ந்தவர் மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால் அவனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், இன்றைக்கும் அந்த சம்பவத்தை அச்சத்துடன் விவரிக்கிறார்.
ஷிவ்குமார் யாதவ்வின் பக்கத்து ஊரைச் சேர்ந்த 32 வயதான அந்த பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டார். "பலாத்கார முயற்சியின் போது கத்தி கூச்சலிட்டேன். ஆனால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தான். அவனது சட்டையை பிடித்து உலுக்கினேன். ஆனால் அவன் என்னை பலவந்தமாக அடித்து உதைத்து கீழே தள்ளினான் என்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்குப்பின்னர் நான் வீட்டை விட்டே நீண்ட நாட்கள் வெளியே வரவேயில்லை என்கிறார்.
பலாத்கார சம்பவத்தில் யாதவ் கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். 2011ஆம் ஆண்டு குர்கானில் பணியில் சேர்ந்த போது அங்கும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறைதண்டனை பெற்றுள்ளான்.
2013ஆம் ஆண்டு பலாத்கார வழக்கிலும், கொள்ளை வழக்கிலும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவன். ஷிவ்குமார் யாதவ் கிராமத்திற்கு சென்றாலே கிராம பெண்கள் தங்களின் மகள்களை வீட்டுக்கதவை பூட்டிக்கொள்ளச் சொல்வார்களாம். பெண்களை கண்டாலே அவர்களின் உடைகளை இழுத்து சில்மிஷம் செய்வானாம். அதனாலேயே அவனைக் கண்டு அஞ்சியுள்ளனர் கிராம பெண்கள்.