ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தினகரன் முதல்வராவார்... சொல்வது புகழேந்தி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் முதல்வராவார் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூரு: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடுவார் என்றும் வெற்றி பெற்று அவர் தமிழக முதல்வராவார் என்றும் அவரது ஆதரவாளரும் கர்நாடகா மாநில செயலாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி புகழேந்தி தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கடுமையாக சாடிய அவர், சசிகலா சட்டத்தை மதிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
தமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெங்கு கொசுவும் ஆதரவாக இருக்கிறது.
ஆர்.கே. நகரில் தினகரன் போட்டி
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடுவார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று டிடிவி தினகரன் முதல்வர் பொறுப்பேற்பார்.
தொப்பிச்சின்னம்
இரட்டை இலை எங்கள் அணிக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் தொப்பி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி போனால் தான் தமிழகத்துக்கு நல்லது.
பரோல் நீடிக்க கோரவில்லை
நடராஜனின் உடல் முழுமையாகக் குணமடையவில்லை. இதனைக் காரணம் காட்டி சசிகலா பரோல் நாட்களை நீட்டிக்கக் கோரவில்லை. எனவே சட்டத்தையும், சிறை விதிமுறையையும் மதிக்கும் வகையில் சசிகலா சிறையில், உரிய நேரத்தில் கையெழுத்திட்டார் என்றும் புகழேந்தி கூறினார்.