குடும்பம் குடும்பமாக ஓட்டு போடுங்க பரிசை அள்ளி செல்லுங்க.. ஆந்திர கலெக்டர் அதிரடி
திருப்பதி: தேர்தலில், 95 சதவீதம் வாக்குப் பதிவாகும் வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட்டவர்களுக்கு, நானோ கார் உட்பட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆந்திராவின் மேடக் மாவட்ட கலெக்டர் ஸ்மிதா சபர்வால் அறிவித்து உள்ளார்.
தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளித்து, நியாயமான முறையில், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற வேண்டும் என்பதற்காக, மேடக் மாவட்ட கலெக்டர், பல கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, 95 சதவீதம் வாக்கு பதிவாகும் வாக்குப்பதிவு மையங்களில், ஓட்டளித்தவர்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு, ஒரு ரூபாய் விலை குறைப்பு, தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, நானோ கார், லேப்டாப், வாசிங் மிசின், பிரிட்ஜ், பைக் போன்றவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில சட்டசபையின், 294 தொகுதிகளுக்கும், 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மே 7 மற்றும் 12ல் தேர்தல் நடைபெறுகிறது. மேடக் தொகுதியில், 7ல் தேர்தல் முடிந்ததும், 9ல் குலுக்கல் நடத்தப்பட்டு, மறுநாளே பரிசு பொருட்கள் அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்மிதா சபர்வால் அறிவித்து உள்ளார்.
இந்த மாவட்டத்தில், இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில், மாவட்ட கலெக்டர் ஸ்மிதா மேற்கொண்ட பரிசு திட்ட முயற்சிகளால், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில், 82 சதவீதம் ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.