டி.என்.ஏ விவர சேகரிப்பு சட்டம் என்றால் என்ன?, மக்களின் மர்ம உறுப்புகளை போட்டோ எடுப்பார்களா?
டெல்லி: மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டி.எஸ்.ராவ் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்ட மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனி மனிதரின் அந்தரங்கங்களை அங்குலம், அங்குலமாக அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்த மசோதா என்பதே சர்ச்சைக்கு காரணம்.
டி.என்.ஏ சட்டம்
இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள சட்ட மசோதாக்களில் மக்களின் மரபணு (DNA) விவர சேகரிப்பு சட்ட முன்வரைவும் ஒன்றாகும். தேசிய அளவில் மக்களின் 'மரபணு விவரத் தொகுப்பு' (database) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்த மசோதா சொல்கிறது.
மரபணு சேமிக்கப்படும்
இந்த விவரங்களின் உதவியுடன் குற்றச் செயல்களையும், சிவில் பிரச்னைகளையும் தீர்க்கலாம் என்று இந்தச் சட்ட முன்வரைவு பரிந்துரைக்கிறது. தன்னார்வலர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் மரபணு மாதிரிகளை கொடுக்கமுடியும். ரத்த வங்கி போலத்தான் இதுவும்.
அந்தரங்க உறுப்புகள்
இந்தச் சட்ட மசோதா, மக்களின் பிறப்பு உறுப்புகள், பின்பக்கம், பெண்களின் மார்பகங்களிலிருந்து மரபணு விவரங்களைச் சேகரிப்பதை கட்டாயமாக்குகிறது. எனவே, தனிமனித அந்தரங்கத்தில் இச்சட்டம் தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது.
படம், வீடியோ
இந்த மசோதாவில் கூறப்படும் தடயவியல் முறை, பிறப்பு உறுப்புகளைப் பரிசோதிப்பதையும் பிறப்பு உறுப்புகளிலுள்ள பாகங்களை படம் எடுப்பதையும் வீடியோ பதிவு செய்வதையும் அனுமதிக்கிறது. இது மிகவும் பத்திரமாக வைக்கப்படும் என்றாலும்கூட, பெண்களுக்கு இதில் சங்கோஜம் ஏற்படலாம்.
குற்றவாளிகளுக்கு ஆப்பு
அதேநேரம், இந்த மசோதாவால் மிகப்பெரிய நன்மை விளையும் என்பதை மறுக்க முடியாது. குற்றம் நடைபெற்ற இடங்களில் கைப்பற்றப்படும் ஆதாரங்களில் பதிவாகியுள்ள மரபணு படிமத்தைக் கொண்டு, அது யாருடைய மரபணு என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதனால், தீவிரவாதம், கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற முக்கிய வழக்குகளை குற்றவாளிகளை பிடிப்பது எளிதாகிவிடும்.