என்னை பார்த்தா அப்படியா தெரிகிறது?: மனநல பரிசோதனைக்கு சம்மதிக்க மாட்டேன்: நீதிபதி கர்ணன் அதிரடி
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மன நல பரிசோதனைக்கு உட்படப்போவதில்லை என்று கர்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: மன நல பரிசோதனைக்கு உட்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார், நீதிபதி கர்ணன்.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.
உச்சநீதிமன்றம் என்பதை ஹைகோர்ட்டின் எஜமானர் கிடையாது என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார் கர்ணன். இந்த நிலையில், கடந்த முறை இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கர்ணனுக்கு மனநிலை சரியாக உள்ளதா, இந்த வழக்கின் தன்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என நீதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
மனநல பரிசோதனை
ஆனால் தனது பணியை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்தால்தான் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவேன் என கர்ணன் கூறியிருந்தார். இந்த நிலையில் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு உத்தரவு
மன நல பரிசோதனைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் நீதிபதி கர்ணன். அப்போது உச்சநீதிமன்ற செயல்பாடு குறித்து தனது அதிருப்தியை கர்ணன் வெளிப்படுத்தினார்.
கர்ணன் எதிர்ப்பு
"நான் மனநல பரிசோதனைக்கு உடன்பட மாட்டேன். நான் மனநல பாதிப்புள்ளவன் என முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் யார்? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை புகாரை தவிர்க்க புகாரை கொடுத்தவரை மனநல பாதிப்பு உள்ளவர் என சித்தரிக்க முயல்வார்கள். அதைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் செய்துள்ளனர்.
ஊழல் புகார்
எனது வழக்கை விசாரிக்கும் 7 நீதிபதிகள் ஊழல்வாதிகள். 20 நீதிபதிகளுக்கு எதிராக நான் புகார் கொடுத்துள்ளேன். அதில், 7 நீதிபதிகள் என்மீது சிறப்பு கவனம் செலுத்துகிறார்களே ஏன்? இவ்வாறு நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மன நல பரிசோதனைக்கு உட்படப்போவதில்லை என்று கர்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது அடுத்தகட்ட விசாரணையின்போது தெரியவரும்.