இந்தியாவில் தொழில் செய்வது பெரிய கஷ்டமப்பா சாமி: கிறுகிறுத்துப்போன ஹோண்டா நிறுவன தலைவர்
மும்பை: இந்தியாவில் தொழில் செய்வது மிகப்பெரிய கஷ்டமான காரியம் என்று ஹோண்டா நிறுவன தலைவர் புமிகிகோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: அடிப்படை வசதிகள் இல்லாதது, நிலையற்ற வரி விதிப்புகள் போன்றவை இந்தியாவில் தொழில் நடத்த மிகப்பெரிய சவாலாக உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இந்த குறைபாடுகளை நீக்க வேண்டும்.
மோடி அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்துவருவது தெரிந்தாலும்கூட முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கை அதிகரிக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஹோண்டா தலைவரின் கருத்து வோடபோன் மற்றும் பிபி ஆயில் நிறுவனங்களின் அதிருப்தியை தொடர்ந்து அடுத்த நாளே வெளியாகியுள்ளது. காஸ் விலை உயர்வு விஷயத்தில் காலதாமதம் ஏற்படுவதாக பிரிட்டீஷ் நாட்டின், பிபி ஆயில் நிறுவனம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. வோடபோன் நிறுவனம் மற்றும் மத்திய அரசு நடுவே 20 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் தனது அதிருப்தியை வோடபோன் வெளிப்படுத்தியிருந்தது.
புமிகிகோ மேலும் கூறுகையில், இந்தியாவில் வரி விதிப்புமுறை மிகவும் விநோதமாக உள்ளது. தொழிலதிபர்களுக்கு ஒற்றை வரி விதிப்பு முறை மிகவும் பலனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் கோப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர அதிக காலம் பிடிக்கிறது. இந்த ரெட் டேப்பை மாற்றி ரெட் கார்ப்பெட் விரிப்பதாக ஜப்பான் வந்திருந்த மோடி தெரிவித்திருந்தார். இதை சாத்தியப்படுத்துவாரா என்று ஆவலாக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.