ஐடி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது.. கர்நாடக சட்டசபை குழு பரிந்துரை
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும உயிரி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி கிடையாது.
பெங்களூர்: பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஐடி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி கிடையாது என்று கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென சட்டசபைக் குழுவின் தலைவர் என். ஏ.ஹாரீஸ் தலைமையில் 21 உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களின் பணி நிலை குறித்து கடந்த நவம்பர் மாதம் ஆய்வு செய்தது.

இந்நிலையில் இன்று கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஹாரீஸ் தலைமையிலான மாநில சட்டசபை கூட்டுக் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பெண்களை இரவு பணிக்கு அமர்த்தக் கூடாது, அதற்குப் பதில் ஆண்களை இரவு பணிகளில் அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்தது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அக்குழுவினர் இத்தகைய பரிந்துரையை வைத்தனர்.
மத்திய அரசு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் சட்டம் 1961-இன்படி, இரவுப் பணிகளில் பெண்களை அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தம் கொணடு வந்தது. இந்நிலையில் மாநில அரசு இரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு நீக்கியது.தற்போது கர்நாடக சட்டசபை கூட்டுக் குழுவின் பரிந்துரையானது மாநில அரசின் விதிகளுக்கு முரணாக உள்ளது.
இந்த குழுவின் அறிக்கையை ஏற்பதா இல்லையா என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.












Click it and Unblock the Notifications