பெங்களூரில் கன்னட நடிகர் ராஜ்குமார் சிலை சேதம்: ரசிகர்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு
பெங்களூர்: பெங்களூரில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமார் மறைந்தாலும் கர்நாடக மக்கள் அவரை இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் அருகே உள்ள பங்காரப்பா நகரில் ராஜ்குமார் சிலை அமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது சிலை அமைக்கும் பணிகள் முடிந்து அதை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்திருந்தனர். சிலை திறப்பு விழா வரும் 23ம் தேதி பிரமாண்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு யாரோ சிலையை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சிலையை சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் கவருக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்த பொது மக்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலை அவமதிப்பை கண்டித்து பங்காரப்பா நகரில் இன்று காலை போராட்டம் நடந்தது. பதட்டமான சூழல் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.
போலீஸ் துணை கமிஷனர் லாபு ராம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.