குடி போதையில் 8 மாத கர்ப்பிணி மீது பைக்கை விட்டு மோதிய கான்ஸ்டபிள் கைது
மும்பை: குடித்துவிட்டு பைக் ஓட்டிக் கொண்டு வந்து எட்டு மாத கர்ப்பிணின் மீது மோதி படுகாயமடைய செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை சிவாஜிபார்க் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் ராஜேந்திர ஆகிரே. இவர் நேற்று மதியம், பணியை முடித்துவிட்டு நன்கு மது குடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தானே கிழக்கு பகுதியில் தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார் சினி ரவீந்திரா (30) என்ற பெண்மணி. சினி 8 மாத கர்ப்பிணியாகும்.
இந்நிலையில் குடிபோதையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை தவறவிட்ட ராஜேந்திரா, சினியின் மீது பைக்கை மோதிவிட்டார். இந்த அதிர்ச்சியில், சினி கீழே விழுந்ததில் அவரது கை, தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார் ராஜேந்திரா.
ஆனால் அப்பகுதியிலுள்ளவர்கள் ராஜேந்திராவை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில், ராஜேந்திரா ஒரு கான்ஸ்டபிள் என்பது தெரியவந்தது. ஏனெனில் சம்பவம் நடந்தபோது அவர் போலீஸ் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார். தான் ஒரு போலீஸ்காரர் என்பதை மறைக்கவே ராஜேந்திரா முயன்றதாகவும், ஆனால், அவரது பைக்கில், போலீஸ் என்று எழுதியிருந்ததை வைத்து விசாரித்தபோது உண்மை வெளியே வந்ததாகவும், விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சினியும், அவரது வயிற்றிலுள்ள குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.