"பிரியாணியால் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது" திடீர் குண்டை போட்ட மே.வ முன்னாள் அமைச்சர்!
கொல்கத்தா: பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாகவும், அதில் என்ன மசாலா பொருட்கள் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் அங்கு 2 கடைகளை மூடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி.. இதை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் பிரியாணி பிரபலம்.
கல்யாண வீடு என்றாலும் சரி.. காது குத்து என்றாலும் சரி.. பிரியாணி போட்டால் அந்த விழாவே கூடுதல் சிறப்பு அடைந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு பிரியாணி உணவு முக்கியத்துவம் பெறும்.
உயிரை குடித்த சிக்கன் பிரியாணி.. சோகமான வளைகாப்பு விழா..திருவாரூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி
பிரியாணி சாப்பிட்டதால்..
சைவ பிரியர்கள் கூட வெஜ் பிரியாணியை ஒரு கை பார்த்து விடலாம். இப்படி ஏகத்திற்கும் இந்தியாவில் பிரியாணி பிரபலம் அடைந்துள்ளது. உணவுப்பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிரியாணிக்கே என்று சொன்னால் கூட மிகையாது. இப்படி இருக்கும் பட்சத்தில் பிரியாணி சாப்பிட்டதால் ஆண்களின் செக்ஸ் உணர்வு பாதிக்கப்பட்டதாக கூறி புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ரவிந்திர நாத் கோஷ் என்பவர்.
ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை குறைக்கிறது
மேற்கு வங்காளத்தில் ஆளும் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த ரவீந்திர நாத் கோஷ், அவரது கடந்த அமைச்சரவையில் முன்பு அமைச்சராக இருந்து இருக்கிறார். இந்த நிலையில், கூச் பெஹாரில் உள்ள பிரியாணி கடைகளை வலுக்கட்டாயமாக மூட வலியுறுத்திய ரவீந்திர நாத் கோஷ், இங்கு பிரியாணி தயாரிக்க பயன்பொடும் மசாலா பொருட்கள் ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.
என்ன மசாலா பொருட்கள் பயன்படுத்துகிறார்கள்
மேலும், அவர் கூறுகையில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் பிரியாணி கடைகளை வைத்துள்ளனர். கடைகளை நடத்த உரிய உரிமம் அவர்களிடமில்லை. இங்குள்ள பிரியாணி சாப்பிட்டதால் தங்களின் செக்ஸ் உணர்வு பாதிக்கப்பட்டதாகவும், என்ன மசாலா பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் இப்பகுதியில் உள்ள ஆண்கள் கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
பிரியாணி கடை மூடல்
இந்த புகார்களையடுத்து இந்தக் கடைகளுக்கு வந்து ஆய்வு நடத்தினோம். ஆனால், பிரியாணி கடையை நடத்துவதற்கான உரிமம் இல்லை. எனவே இந்த கடைகளை மூடியிருக்கிறோம்" என்றார். பலருடைய விருப்ப உணவான பிரியாணி சாப்பிட்டதால் செக்ஸ் உணர்வு பாதிக்கப்பட்டதாக மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த நபரே விமர்சித்து கடையை மூடியிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரிய ஆய்வு நடத்த உத்தரவு
குறிப்பாக இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் சிலர் விவாதித்து வருகின்றனர். தற்போது மூடப்பட்ட கடைகளை நடத்தியவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இப்படி தடாலடியாக நடந்து கொண்டது சட்டத்தை கையில் எடுக்கும் செயல் என்று அங்குள்ள எதிர்க்கட்சி நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.