நாடு முழுவதும் ரூ.80 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
டெல்லி: நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 80 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், இந்த தொகை சிக்கியுள்ளது.
தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் , வருமானவரித்துறை, கலால் வரித்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களை செலவு கணக்கு பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதைத் தவிர கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்தையும், நிதி புலனாய்வு பிரிவையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 80 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், மிகப் பெரிய அளவாக 49 கோடியே 85 லட்சம் ரூபாய் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக தமிழகத்தில் 11 கோடியே 32 லட்சம் ரூபாயும், மூன்றாவதாக உத்திர பிரதேசத்தில் 9 கோடியே 30 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 659 அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பணம் பறிமுதல் குறித்து அனைத்து நாட்களிலும் தகவல் பெறலாம் கூறியுள்ளது.