மணிப்பூர்: சிறப்பு முகாம்களில் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டு- தேர்தல் ஆணையம் ஒப்புதல்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் சிறப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 27-ந் தேதி 38 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக மார்ச் 3-ந் தேதி எஞ்சிய 22 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இழந்த ஆட்சியைப் பெறுவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரையில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறுகின்றன.
''ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்காதீங்க..'' கோரிக்கை வைக்கும் மணிப்பூர் பழங்குடியினர்.. ஏன் தெரியுமா?
மணிப்பூர் தேர்தல் களத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம்தான் பிரதான பிரச்சனையாக இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் சிறப்பு முகாம்களில் இருக்கும் தீவிரவாதிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மணிப்பூரைப் பொறுத்தவரையில் ஏராளமான ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன. 20 குக்கி தேசிய இன ஆயுதக் குழுக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி, குக்கி தேசிய அமைப்பு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆயுத குழுக்களை சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆயுதக் குழுக்கள் மத்திய அரசுடன் அமைதிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக இம்முறை வாக்குசீட்டுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு முகாம்களில் வாக்கு சீட்டுகளை வழங்கி வாக்களிக்க தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.