ஐ.பி.எல் சூதாட்டம்: நாடுமுழுவதும் அமலாக்கத்துறை இயக்குநரகம் ரெய்டு
மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, நாக்பூர், மற்றும் போபால் உள்ளிட்ட 10 நகரங்களிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பெட்டிங் சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா இருவரும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயுள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி லோதா தலைமையிலான குழு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை இயக்குநரகம் ரெய்டுகளை நடத்தியுள்ளது. இருப்பினும் தற்போது புதிதாக கிடைத்த தகவல்களின் அடிப்டையில் நேற்றைய ரெய்டுகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் நேற்றைய ரெய்டு நடந்துள்ளது. சமீபத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு பண்ணை இல்லத்தில் வைத்து சில புக்கிகள் பிடிபட்டனர். மார்ச் 19ம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கிரண் மாலா, டோமி படேல் ஆகியோர் முக்கியமானவர்கள். டோமி படேல் உஞ்சா நகராட்சியின் கவுன்சிலர் ஆவார்.
ஐ.பி.எல் பெட்டிங் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பண மோசடி மற்றும் சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 4000 கோடி அளவுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 418, 419, 420, 467, 471, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த 6வது சீசன் போட்டியில், சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த், அன்கித் சவான், அஷோக் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.