மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் சகன் புஜ்பால் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள் பதிவு
மும்பை: மகாராஷ்டிராவில் ஊழல் முறைகேடு தொடர்பாக அம்மாநில முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சகன் புஜ்பால் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் ரூ.100 கோடி செலவில் "மகாராஷ்டிரா சதன்" கட்டிடம் புதுப்பிக்கும் பணி மற்றும் மும்பையில் அரசு கட்டிடங்கள் கட்டியதில் ஊழல் நடந்திருப்பது அம்பலமானது. இது தொடர்பாக அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான தேசியவாத காங்கிரசின் சகன் புஜ்பால் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல மும்பை கலினாவில் அரசு கட்டிடம் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால், நெருங்கிய உறவினர் சமீர் புஜ்பால் உள்பட 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் நவிமும்பை வீட்டு வசதி திட்டம் ஒன்றில் நடந்த ரூ.44 கோடி ஊழல் தொடர்பாக சகன் புஜ்பால், பங்கஜ் புஜ்பால், சமீர் புஜ்பால் ஆகியோர் மீது 3-வது ஊழல் வழக்கை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவரது வீடு மற்றும் பிற பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இது அவருக்கு பெரும் நெருக்கடியாகும்.