''எல் நினோ''வின் அபாயப் பிடியில் மீண்டும் இந்தியா!: வறட்சியும் பணவீக்கமும் வரும்!!
டெல்லி: இந்தியாவை மீண்டும் "எல் நினோ" தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதுடன் பணவீக்கம் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் எல்நினோ தாக்கும் போது எவ்வளவு வெப்பநிலை நிலவியதோ அதே வெப்பநிலை தற்போதும் நிலவும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக மழை பொழிவு குறையும் என்று தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களான ஜுன் முதல் செப்டம்பர் மாத காலங்களில் பசிபிக் கடற்கரையோர பகுதிகளில் நிலவப்போகும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வழக்கமாக பெய்யும் மழையளவை விட தற்போது 23 சதவீதம் மழை குறைவாக பெய்யும் என்று வானிலை மையம் கூறுகிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த விவசாயமும் மழை பொழிவை நம்பியிருக்கும் சூழலில் மழையளவு குறையும் என்பது விவசாயிகளை மிகவும் பாதிக்கும் அபாயம் என்று தெரிகிறது.
எல் நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு சிறு பையன் என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது.
பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய நீரை மேற்கு நோக்கி கொண்டு சேர்க்கிறது.
இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது பூமத்திய ரேகை பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்கு பகுதியில் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்கும்.
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக வானிலை மையத்தின் இயக்குனரான பி.பி.யாதவ் கூறியுள்ளார். இவ்விஷயம் புதிதாக அமையவுள்ள மத்திய அரசுக்கு கடும் சவாலை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.