ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா… உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனை
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து நாளை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்களை தேர்தல் ஆணையம் தமிழக உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
டெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக உயரதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 12ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு விறு விறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
முக்கிய வேட்பாளர்கள்
இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
பணப்பட்டுவாடா
இந்தத் தொகுதியின் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு நாளை ஏற்பாடு செய்துள்ளது.
அழைப்புக் கடிதம்
இதில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருமானவரித்துறை இயக்குநர், உள்துறைசெயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
டெல்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்சனை பிரதானமாக அலசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு தீவிரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.