ரூ.350 கோடி பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட எம்எல்ஏ- மர்மம் விலகியது
லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநில ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. 350 கோடி ரூபாயை பறிகொடுத்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., அனார் சிங் திவாகர். இவர் கோட்வாலி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் ஞாயிறன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது மர்மமாக இருந்தது.
இந்நிலையில், அவரது சடலம் கைப்பற்றப்பட்ட ஓட்டல் அறையில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் திவாகர் எழுதிய ஒரு கடிதம் ஆகியவற்றை போலீசார் திங்கட்கிழமை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை திவாகர் எழுதியுள்ளார்.டெல்லியை சேர்ந்த 5 பேர் தன்னிடமிருந்து 350 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதால் இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுக்க நேர்ந்தது என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, திவாகர் மரணத்திற்கான மர்மம் விலகியுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜலேசர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட திவாகர் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனையடுத்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஹத்ராஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார்.
சமீபத்தில், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் திவாகர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.