அரவிந்த் கேஜ்ரிவால்... அசாதாரணமான எழுச்சி... ஆச்சரியகரமான வளர்ச்சி!
டெல்லி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில், அன்னா ஹஸாரேவுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்து ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கி இன்று டெல்லி சட்டசபைக்குள் நுழையப் போகும் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தலி்ல கேஜ்ரிவாலின் கட்சிக்கு 17 இடங்கள் வரை கிடைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கூறியுள்ளன.
கேஜ்ரிவால் கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது நடந்தால் நிச்சயம் அது கேஜ்ரிவாலுக்கு அது சாதனையான விஷயம்தான்.
5 கருத்துக் கணிப்புகளில் 17 இடம்
ஐந்து எக்ஸிட் போல்களில் கேஜ்ரிவால் கட்சிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸுக்குச் சமமாக
அதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தலைநகரை ஆண்டு கொண்டிருக்கும், நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸுக்குச் சமமாக நேற்று பிறந்த கேஜ்ரிவால் கட்சியும் வெற்றி பெறவுள்ளதாக கூறப்படுவதுதான்.
ஆட்சியமைக்க கேஜ்ரிவால் தயவு தேவை
எக்ஸிட் போல் கணிப்புகளின்படி டெல்லியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை காணப்படுகிறது. எனவே யார் ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் கேஜ்ரிவாலின் தயவு அவசியம் தேவை.
துடைப்பத்தைக் கொண்டு...
இந்தத் தேர்தலில் கேஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களுக்கு துடைப்பம் சின்னம் தரப்பட்டிருந்தது. பலரும் இதை வைத்து கிண்டலடித்துப் பிரசாரம் செய்தனர்.
மோடிக்கு முகத்தில் அடி
குறிப்பாக நரேந்திர மோடி ரொம்பவே கேலி செய்தார். துடைப்பத்தைக் கூட கேஜ்ரிவால் விடவில்லையே என்றும் நக்கலடித்தார். ஆனால் இன்று பாஜகவால் அங்கு பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. கேஜ்ரிவாலின் தயவு அவர்களுக்குத் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வெற்றி
எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து கேஜ்ரிவால் கூறுகையில், இது என் வெற்றி அல்ல. மக்களுக்குக் கிடைத்த வெற்றி. நான் நம்பிக்கையுடன் உள்ளேன்.
2 நாட்களுக்கு தியானம் செய்யப் போகிறேன்
அடுத்து 2 நாட்களுக்கு தியானம் செய்யப் போகிறேன். டிசம்பர் 7ம் தேதி மறுபடியும் அனைவரையும் சந்திப்பேன் என்றார்.
எதிர்மறை பிரசாரங்களையும் தாண்டி
பிரசாரத்தின்போது கேஜ்ரிவால் மீதும், அவரது கட்சியினர் மீதும் பல்வேறு சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அன்னா ஹஸாரேவுக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே நடந்த மோதல் குறித்தும் செய்திகள் வெளி வந்தன. ஸ்டிங் ஆபரேஷன்களும் களத்தைக் கலக்கின. ஆனால் அதையும் தாண்டி குறிப்பிடத்தக்க இடங்களை ஆம் ஆத்மி பெருவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.
கட்சி உடையாம இருந்தா நல்லதுதான்...
அதேசமயம், ஆட்சியமைக்க முயலப் போகும் பாஜக, ஆம் ஆத்மியை உடைக்க முயற்சிக்கலாம் என்ற யூகங்களும் கச்சை கட்டி கிளம்ப ஆரம்பித்துள்ளன. அதேபோன்ற முயற்சியை காங்கிரஸும் மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதிலிருந்து ஆம் ஆத்மி தப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.