நித்யானந்தா ஆசிரமத்தில் குருபூர்ணிமா பூஜை நடத்த கன்னட அமைப்பு எதிர்ப்பு- போராட்டத்தால் பதற்றம்
பெங்களூர்: நித்யானந்தாவின் கர்நாடக ஆசிரமத்தில் பூஜைகளை நடத்த கூடாது, அவரை மாநிலத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கன்னட அமைப்பு சார்பில் ஆசிரமத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படுகிறது.
பெங்களூர்-மைசூர் சாலையில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம், நித்யானந்தா தியானபீடம் என்ற பெயரில், செயல்பட்டு வருகிறது.
குருபூர்ணிமா
இங்கு ஆண்டுதோறும் குருபூர்ணிமா விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இன்று, குருபூர்ணிமாவையொட்டி குண்டலினி பூஜை உள்ளிட்ட பல சிறப்பு பூஜைகளுக்கு நித்யானந்தா ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் குவிந்தனர்
இதுகுறித்த அழைப்பிதழ், போஸ்டர்களாக பிடதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. வழக்கமான பக்தர்களுக்கு இ-மெயில் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நித்யானந்தா பக்தர்கள், ஆசிரமத்துக்கு வந்துள்ளனர்.
போராட்டம்
ஆனால், இங்கு பூஜை உள்ளிட்ட எந்த வழிபாடும் நடத்த கூடாது என்று கோரிக்கைவிடுத்து, 'கர்நாடக நவநிர்மான்' என்ற கன்னட அமைப்பு இரு தினங்களாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து எறிந்தும், பேனர்களை அடித்து உடைத்தும் நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்தனர்.
டயர்கள் எரிப்பு
இந்நிலையில் இன்று காலையிலேயே, நித்யானந்தா ஆசிரமத்துக்கு எதிரே சென்று கர்நாடக நவநிர்மான் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். ஆசிரமத்துக்கு எதிரே டயர்களை கொளுத்திப் போட்டு நித்யானந்தாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மாநிலத்தை விட்டு வெளியேற்றுக..
அந்த போராட்ட குழுவின் உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் "இந்து சமயத்துக்கு எதிரான வழிபாட்டு முறைகளை நித்யானந்தா செய்து வருகிறார். இந்து சமயத்துக்கு அவர் இழுக்கை ஏற்படுத்துகிறார். மேலும், ஆசிரமம் முழுவதுமே முழுக்க தமிழ்மயமாகியுள்ளது. கர்நாடகாவில் இருந்து கொண்டு, ஆசிரமத்திற்குள் எந்த அலுவலும் கன்னடத்தில் நடைபெறுவதில்லை. எனவே நித்யானந்தாவை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்" என்று ஆக்ரோஷமாக கூறினர்.
பலத்த பாதுகாப்பு
போராட்டத்தை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரம கேட்டுகள் மூடப்பட்டு உள்ளே பத்திரிகையாளர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.