ராணுவம் மற்றும் இந்தியாவின் இமேஜை வி.கே.சிங் களங்கப்படுத்தி விட்டார்: பரூக் அப்துல்லா
டெல்லி: இந்திய ராணுவம் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்ததாக கூறியதன் மூலம் முன்னாள் ராணுவ தளபதி இந்திய ராணுவத்தின் இமேஜை மட்டுமல்ல, இந்தியாவின் இமேஜையே களங்கப்படுத்தி விட்டார் என பரூக் அப்துல்லா குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங். பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் எனவும், ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும், தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டியளித்தார் காஷ்மீர் முன்னால் முதல் மந்திரியும், தற்போதைய எம்.பி.யும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா. அப்போது அவர் கூறியதாவது:-

குடும்பத் தலைவர்....
ராணுவத்தின் தளபதி என்பவர் ஒரு குடும்பத்தின் தலைவர் போன்றவர். இந்த குற்றச்சாட்டை கூறியதன் மூலம் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் குடும்பத்தையே அழித்துவிட்டார்.

பண உதவி பெறவில்லை....
அவர் கூறியது போல் நானோ, என் மகனோ, என் கட்சியை சேர்ந்த மற்றவர்களோ ராணுவத்திடம் இருந்து பண உதவி பெற்றதே கிடையாது.

உரிய விசாரணை....
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா திரும்பியதும் வி.கே.சிங் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நான் கூறுவேன்.

அபத்தமான குற்றச்சாட்டு...
வி.கே.சிங் கூறும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமான பொய் குற்றச்சாட்டு ஆகும். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டால் தான் ராணுவத்திடம் இருந்து பண உதவி பெற்ற அரசியல்வாதிகள் யார்? என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நிரூபிக்க முடியும்.

தெளிவான பதில் வேண்டும்....
யார் யாருக்கு பணம் தந்துள்ளார்? என்ற பெயர் விபரங்களையும் வி.கே.சிங் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இந்தியாவிற்கே களங்கம்....
ராணுவ அமைப்பு ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்தது என்று கூறியதன் மூலம் இந்திய ராணுவத்தை மட்டுமல்ல இந்தியாவின் இமேஜையே வி.கே.சிங் களங்கப்படுத்திவிட்டார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications