மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கொதித்தெழுந்த கேரள முதல்வர்.. எடப்பாடியும் இருக்காரே!
திருவனந்தபுரம்: இன்று மாட்டு இறைச்சிக்கு தடை விதிப்பவர்கள் நாளை மீனுக்கும் தடை விதிப்பார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகள், எருமைகள், ஒட்டகங்களை வெட்டக் கூடாது என மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விஜயன் இவ்வாறு காட்டமாக கூறியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் இதுகுறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் கேகரள முதல்வர் விஜயன்.
ஏழைகளின் சாப்பாடு மாட்டிறைச்சி
பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது: ஏழைகள், தலித்துகளின் சாப்பாடாக மாட்டிறைச்சி உள்ளது. அவர்களுக்கு அதில் இருந்துதான் ஊட்டச் சத்து கிடைக்கிறது. இது சாப்பாட்டு உரிமையில் கை வைக்கும் செயலாகும்.
இன்று மாடு.. நாளை மீனா!
இன்று மாடு, எருமை இறைச்சிக்கு தடை என கூறும் மத்திய அரசு, அடுத்ததாக மீன் சாப்பிடவும் தடை விதிப்பார்கள். மத்திய அரசின் முடிவு நாகரீகமற்றது.
மக்கள் கோபத்தைக் காட்ட வேண்டும்
மக்கள் தங்கள் கோபத்தை இதன் மீது காட்ட வேண்டும். மத்திய அரசின் ஆட்சி யாரிடம் உள்ளது என்பதை இந்த முடிவு காட்டிவிட்டது என கூறியுள்ளார்.
மதச்சார்பின்மை மீதான தாக்குதல்
முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த நாட்டின் மதசார்பின்மை மீது தாக்குதல் நடத்துகிறது. மத்திய அரசை அது பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தனது கொள்கைகளை நிலைநிறுத்த பார்க்கிறது. பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது என்றார் பினராயி விஜயன்.