தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி
டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், 75 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கடந்த 11ம் தேதியில் இருந்தும், தாலுகா மீனவர்கள் 16ம் தேதியில் இருந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் நாகையில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்தப் பட்டது.
அதன் பின்னர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் 12 பேர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இது குறித்து பேசினர். அதன்பிறகு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில், சந்தித்த பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ‘இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, மீனவர்கள் கடந்த 24ம் தேதி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால், மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இன்று 18வது நாளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதி மீனவ பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி மனு கொடுத்தனர். மேலும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரவும் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மீனவப் பிரதிநிதிகளிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ஜனவரி 20-ல் நடைபெறும் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.