எல்லை தாண்டும் மீனவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.. இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்
ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியா வந்தார். மாலை 5 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, திருகோணமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது, எல்லை தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தாக்கக் கூடாது என்றும் மோடிக் கேட்டுக் கொண்டார். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து சிறைப்படுத்துவதாக புகார்கள் வரும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு ரணிலிடம் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.