பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: எல்லையில் 5 பேர் சுட்டுக் கொலை- 35 பேர் படுகாயம்!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ,ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் இன்று காலை அத்துமீறி நுழைந்து எல்லைப்பாதுகாப்பு படையினர் முகாம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
இந்த மோதல்களில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இது 3வது முறையாக நடந்த அத்துமீறல் இதுவாகும்.
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதனிடையே வடக்கு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தாங்தார் பகுதியில் நேற்று இரவு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.