கால்பந்தாட்டம் பார்க்க பிரேசில் போன கல்லூரி மாணவன்.. கம்பி எண்ணுவதோ திகார் சிறையில்..
டெல்லி: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை பார்க்க பிரேசில் சென்ற இந்திய கல்லூரி மாணவன் இப்போது திகார் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார். காரணம், போலி விசா மோசடி பேர்வழியிடம் ஏமாந்ததுதான்.
சண்டிகரை சேர்ந்தவர் அமித்பால் சிங். கல்லூரி பட்டப்படிப்பு ,இறுதியாண்டு தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட் எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர். அதே நேரம், குடும்பம் வசதியானது என்பதால், இவருக்கு சொந்தமான சண்டீகரில் ஹோட்டல், பிளாட் வீடுகள் உள்ளனவாம்.
அமித்பால்சிங்கிற்கு கால்பந்தாட்டம் என்றால் உயிர். பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை நேரில் சென்று ரசிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே, பணம் சேர்த்து வைத்துள்ளார்.
பிரேசில் நாட்டு விசாவுக்காக மும்பையை சேர்ந்த டிராவல் ஏஜெண்ட் ஒருவரை அமித்பால்சிங் அணுகியுள்ளார். அந்த ஏஜெண்ட் விசா வாங்கித்தர ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். பேரத்துக்கு பிறகு இறுதியாக, ரூ.5 லட்சம் தருவதற்கு அமித்பால் சம்மதித்தார்.
பணத்தை வாங்கிய ஏஜெண்ட் 'விசாவை' அமித்பால்சிங்கிடம் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிரேசில் சென்றிருந்த அமித்பாலுக்கு அந்த நாட்டு ஏர்போர்ட்டிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
விசாவை பரிசோதித்து பார்த்த குடியுரிமை அதிகாரிகள், அமித்பாலிடம் இருப்பது போலி விசா என்று கூறி உடனடியாக இந்தியாவுக்கு திருப்பியனுப்பினர். தகவல் கிடைக்கப்பெற்றதும், டெல்லி ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அமித்பால்சிங்கை போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளளனர்.
டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து அமித்பால்சிங் கிளம்பும்போது, போலி விசாவை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொள்ளாமல்விட்டது எப்படி என்பது பற்றியும் இப்போது விசாரணை தொடங்கியுள்ளது.