பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பை தவிர்க்க நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி
டெல்லி: டெல்லியில் பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச சுகாதார மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுகாதார உச்சி மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பை தடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள இந்த 2 நாள் மாநாட்டில், சார்க் நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "இந்தியாவில் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதனால் பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு வெகுவாக குறைந்து விட்டது. 1990 ஆம் ஆண்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 126 இல் இருந்து 49 ஆக குறைந்து விட்டது. அப்போது உலக அளவிலான சராசரி இறப்பு விகிதம் 46 ஆக இருந்தது.
பிரசவத்தின் போது அனைத்து தாய்மார்களும், குழந்தைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள 184 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு குடும்ப நலம், சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பு ஊசி போடாததால் குழந்தை இறந்தது என்ற நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. "ஜனனி சுரக்ஷா யோஜனா" என்ற திட்டத்தின் மூலம் 75 சதவீத பிரசவங்கள் சுகாதார மையங்களில் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குடும்ப நலம், சுகாதாரம் போன்றவற்றில் சார்க் நாடுகள் உள்ளிட்ட இந்த மாநாட்டில் பங்கு கொண்டுள்ள அனைத்து நாடுகளுடனும் எங்களுடைய அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.