விழியோடு விழி நோக்கி ரொம்ப நேரம் உற்றுப் பார்த்தால் என்னாகும் தெரியுமா..?!
டெல்லி: இரு கைகளையும் பிடித்து நெருக்கமாக நின்று வைத்த கண் வாங்காமல், விழியோடு உறவாடி.. இருவரது கண்களுக்குள்ளும் ஆழமாக ஊடுறுவி பார்க்கும் காதலர்களே.. கொஞ்சம் வெயிட் பிளீஸ்.. அதுல கொஞ்சம் சிக்கல் இருக்காம். ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படி விழிகளுக்குள் ஊடுறுவி ஆழப் பார்வை பார்க்கும்போது இருவருக்குள்ளும் ஒரு விதமான மாயையான எண்ணம் உண்டாகுமாம். இல்லாதது இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறதாம். இதை ஆய்வு செய்து சொல்லியுள்ளனர் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று.
இத்தாலியின் உர்பினோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜியோவன்னி கபுடோ தலைமையிலா ஆய்வுக் குழு 20 ஜோடிகளை வைத்து இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இருட்டறையில்
இந்த 20 ஜோடிகளையும் ஒரு இருட்டான அறையில் அமர வைத்துள்ளனர். ஜோடி ஜோடியாக எதிரெதிராக அமர வைத்தனர். அவர்களுக்கு முன்பு இருந்த மேசையில் ஒரு மெழுகுவர்த்தி மட்டுமே ஏற்றப்பட்டிருந்தது.
10 நிமிஷம் உத்துப் பார்க்கனும்
ஜோடிகள் எந்தவிதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல், பேசிக் கொள்ளாமல் கண்களை மட்டும் உற்றுப் பார்த்தபடி 10 நிமிடம் இருக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதுவரை கண்டிராத கற்பனைகள்
அந்த சமயத்தில் அவர்களின் மன ஓட்டத்தையும் மூளையில் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்காணித்தபோது அந்த ஜோடிகள் அதுவரை கண்டிராத கற்பனைகளையும், மாயையான எண்ணங்களையும் சந்தித்தது தெரிய வந்ததாம்.
வினோதமான எண்ணங்கள்
பின்னர் அந்த ஜோடிகளிடம் விதம் விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. சிலர் எங்களது மனதில் சாத்தானின் முகம் வந்தது போல உணர்ந்தோம் என்று கூறியுள்ளனர். சிலர் எங்களது உறவினர்களின் முகத்தைப் பார்க்க முடிந்தது என்றனர். சிலருக்கு முகம் சுருங்க விகாரமானது போல உணரந்தோம் என்று கூறியுள்ளனர். சிலருக்கு தங்களது வீட்டில் வளர்க்கும் நாய் முகம் தோன்றியதாக கூறியுள்ளனர்.
சாத்தான்
பெரும்பாலானவர்கள் கூறியது சாத்தான் முகம் தோன்றியது என்றுதான். சிலருக்கு தங்களது முகம் சுருங்கிப் போனது போல உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
மார்பிங் செய்த முகம் போல
சிலர் தங்களது பார்ட்னரின் முகத்தைப் பார்த்தபோது மார்பிங் செய்யப்பட்ட முகம் போல இருந்ததாக கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் தங்களது உறவினரின் முகம் தெரிந்ததாக கூறியுள்ளனர்.
உலகையே மறந்து விட்டோம்
சிலர் தங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து விடுபட்டு வேறு உலகத்திற்குப் போனது போல உணர்ந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுபடும் மன நிலை
இதுகுறித்து கபுடோ விளக்குகையில் மெல்லிய வெளிச்சம் மற்றும் தொடர்ந்து ஒரே ஆப்ஜெக்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களைச் சுற்றியுள்ள உலகை விட்டு விலகியது போன்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது.
முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால்
முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு விதம் விதமான கற்பனைகளும், வினோதமான சிந்தனைகளும் வந்து விதம் விதமான தோற்றங்கள் தோன்றியுள்ளன என்றார்.
நல்ல வேளை செத்துப் போன ஆயா முகம் தோன்றியதாக யாருமே சொல்லவில்லை!