பரிசு பொருள் வழக்கில் இருந்து தப்பிய ஜெ.,- செங்கோட்டையனை விடாமல் துரத்தும் சிக்கல்
பிறந்த நாள் பரிசுப் பொருள் வழக்கில் இருந்து ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். செங்கோட்டையன் மீதான விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்து விட்டதால் பிறந்தநாள் பரிசுப்பொருள் வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம் இருவரையும் விடுவித்துள்ளது. செங்கோட்டையன் மீதான விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளில் பல்வேறு இடங்களில் இருந்த பரிசுகள் வந்தன. இதில் 57 பேரிடமிருந்து 89 டிடிகளும், 3 லட்சம் அமெரிக்க டாலரும், ரொக்கப்பணமும் மொத்தம் ரூ. 2 கோடி வந்தது. முதல்வராக பதவி வகித்து வருபவர் தனக்கு வரும் அன்பளிப்பு மற்றும் பரிசுகளை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
ஆனால், ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் இந்த பரிசு பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இது குறித்து கடந்த 1996ல் சிபிஐ விசாரணை நடத்தி ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் பரிசுப் பணத்திற்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
உயர்நீதிமன்றம் தள்ளுபடி
பரிசுப்பொருள் வழக்கில் 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2011 செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சிபிஐ கோரிக்கை விடுத்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
அழகு திருநாவுக்கரசு மரணம்
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் அழகுத்திருநாவுக்கரசு. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லாமல் காலம் தாழ்த்தி தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான விசாரணையை ஒத்திவைத்தனர். இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு மீண்டும் கோரிக்கை வைத்ததை அடுத்து ஜனவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜெயலலிதா மரணம்
உடல்நலக்குறைவினால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மரணமடைந்ததை அடுத்து வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
செங்கோட்டையன் சிக்கினார்
பினாகி சந்திரகோஷ் மே மாதம் ஓய்வு பெறுவதால் புதிய அமர்வு கோடை விடுமுறைக்குப் பிறகு பரிசுப்பொருள் வழக்கை விசாரிக்கும் என்றும் செங்கோட்டையன் மீதான விசாரணை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செங்கோட்டையன் தற்போது அதிமுக அவைத்தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை உறுதி?
ஜெயலலிதாவும், அழகு திருநாவுக்கரசுவும் மரணமடைந்து விட்டதல் வழக்கில் இருந்து தப்பிய நிலையில், செங்கோட்டையன் மட்டுமே சிக்கியுள்ளார். பரிசுப்பொருள் வழக்கில் செங்கோட்டையனுக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா ஆதரவு பெற்ற எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் மீதான பிடி இறுகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.