பட்டுபோன 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம்... துளிர் விட குளுகோஸ் டிரிப்ஸ் ஏற்றப்படும் வினோதம்
தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் புத்துயிர் பெற வேண்டும் என்பதற்காக குளுகோஸ் டிரிப்ஸ் ஏற்றப்படுகிறது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பட்டு போனதால் அது புத்துயிர் பெற குளுகோஸ் டிரிப்ஸ் ஏற்றப்படும் காட்சிகள் வினோதமாக உள்ளன.
மெஹபூப்நகர் மாவட்டத்தில் பில்லாலமாரி என்ற இடத்தில் ஆலமரம் உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான மரத்தில் பூச்சிகள் அரித்து அதன் வேர் வரை சென்றதால் அந்த மரம் பட்டு போனது.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மரத்தின் வேர்கள், தண்டு ஆகியன சேதமடைந்ததால் கடந்த 2017-ஆம் ஆண்டு மரம் சாய்ந்தது.
மரத்துக்கு குளுகோஸ் ஏற்றம்
நோயாளிகளுக்கு குளுகோஸ் பாட்டில் ஏற்றுவது போல் மரத்திற்கு ஆங்காங்கே துளைகளையிட்டு பைப் மூலம் குளுகோஸ் ஏற்றி வைத்துள்ளனர் வனத்துறையினர். ஒவ்வொரு 2 மீட்டருக்கு இடையே குளுகோஸ் பாட்டில்கள் போடப்பட்டுள்ளன.
மரத்துக்கு பாதுகாப்பு
இந்த மரத்தை 3 வழிகளில் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அதில் க்ளோர்பைரிஃபோஸ் ரசாயனத்தை கலந்து தண்டுகளின் அடியில் வைத்தனர். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. அந்த திரவம் உடனடியாக திரும்ப வெளியே வந்துவிடுகிறது. அதன் பிறகுதான் குளுகோஸ் பாட்டில் ஏற்றுவது என முடிவு செய்தனர்.
குளுகோஸ் பாட்டில்
குளுகோஸ் பாட்டில் வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வேரில் உள்ள பூச்சிகளை கொல்ல வேருக்கு தண்ணீர் போல் கரைக்கப்பட்ட பூச்சி மருந்தை ஊற்றுகின்றனர். மூன்றாவதாக முறிந்துள்ள மரக்கிளைகளை முட்டுக் கொடுத்து பிடிக்க சிமென்ட் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கேள்வி கேட்கவில்லை
இந்த மரத்தின் வேர்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்திவிட்டனர். இதனால் மரத்தின் வேர்களுக்கு செயற்கையான முறையில் வலு கொடுக்க சுவர்களையும் பைப்களையும் அமைக்கின்றனர். எனினும் இத்தகைய பழமைவாய்ந்த மரத்தை பராமரிக்க தவறியது குறித்து எந்த வித விசாரணையும் நடத்தப்படவில்லை. கடந்த டிசம்பர் முதல் இந்த மரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
புராதன மரம்
இத்தனை செயற்கை வலுசேர்த்தலுக்கு பிறகு மரம் சீராக உள்ளது. உயரதிகாரிகளுடன் பேசிவிட்டு மரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மிகவும் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவர்.