பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு
பனாஜி/டேராடூன்: பாஜக ஆட்சியில் இருக்கும் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இம்மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா மாநிலம். இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த 40 தொகுதிகளில் மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2997. 41 பேர் பாலியல் தொழிலாளர்கள். 9 பேர் திருநங்கைகள்.
திணறும் பாஜக.. டஃப் தரும் காங்கிரஸ்.. இதற்கு நடுவே கெஜ்ரிவால்.. கோவா மாநில தேர்தல் பரபரப்பு
கோவா தேர்தல் பாஜக
கோவா மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.
காங். எதிர்காலம்
இதன் தொடர்ச்சியாக கடந்த 5 ஆண்டுகளில் கொத்து கொத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டது பாஜக. எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டது. இதனால் இம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.
கோவா தேர்தல் கருத்து கணிப்புகள்
கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள் கிடைக்குமாம். அதுவும் ஆம் ஆத்மியை விட காங்கிரஸுக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். திரிணாமுல் காங்கிரஸ், கோவா மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கின்றன கருத்து கணிப்புகள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. கோவா விடுதலை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சித்தது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஜகவின் கருத்து. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. கோவா தேர்தலில் சுற்றுலா துறை, சுரங்க தொழில், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை விவகாரங்கள் பிரதான விவாதப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
உத்தரகாண்ட் தேர்தல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 564 பேர் ஆண்கள்; பெண் வேட்பாளர்கள் 62 பேர்.