இனி ஆதார் இல்லாமல் திருமண இணையதளங்களில் பதிவு செய்ய முடியாது
டெல்லி: திருமண இணையதளங்களில் தங்கள் பெயரை பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை இல்லாமல் இனி பதிவு செய்ய முடியாது.
நவீன யுகத்தில் திருமணங்கள் மேட்ரிமோனி எனப்படும் திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமண வயதில் உள்ள ஆண்களும், பெண்களும் அத்தைகைய இணையதளங்களில் தங்களின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்கிறார்கள். இந்நிலையில் திருமண இணையதளங்களில் பெயரை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் கேவை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரின் பின்னணி பற்றி விசாரிக்காமல் உபேர் நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்தது. இந்நிலையில் தான் திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை தவிர்க்க மேனகா இந்த உத்தரவிட்டுள்ளார்.
திருமண இணையதளங்களில் ஏற்கனவே திருமணமானவர்கள் உள்ளிட்ட மோசடிக்காரர்கள் தங்களின் செல்போன் எண்ணை மட்டும் அளித்து பெயரை பதிவு செய்கிறார்கள். அவர்களை நம்பி தொடர்பு கொள்ளும் பெண்களின் வாழ்க்கை நாசமாகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டால் ஆண்கள் தங்கள் புகைப்படத்துடன் தான் பெயரை பதிவு செய்ய முடியும். மேலும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் வைத்து பெண் தேட முடியாது.
இது குறித்து பாரத்மேட்ரிமோனி. காமின் சிஇஓ முருகவேல் கூறுகையில்,
ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது சிக்கலாகிவிடும். பலர் தங்களின் பிரைவசியை மதிப்பவர்கள். சிலரிடம் அடையாள அட்டை கூட இல்லை என்றார்.
ஷாதி.காம் சிஇஓ அனுபம் மிட்டல் கூறுகையில்,
திருமண இணையதளங்களில் பெயரை பதிவு செய்ய ஆதார் அட்டை தேவை என்று அரசு கூறினால் அதை ஏற்கத் தான் வேண்டும். ஆனால் எத்தனை பேரிடம் ஆதார் அட்டை உள்ளது. உத்தரவிடும் முன்பு அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளார்களா என்பதை அரசு சரிபார்க்க வேண்டும் என்றார்.