விறுவிறுவென இந்தியர்களை மீட்கும் விமானப்படை... ஏமனிலிருந்து இதுவரை 4000 பேர் மீட்பு!
டெல்லி: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் இருந்து இதுவரை சுமார் நான்கு ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, வான்வழி மீட்புப் பணியை இன்றோடு முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவ கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அந்நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்டு, தாய்நாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனவே, நிலையில், விமானங்கள் வாயிலாக நடைபெற்று வரும் மீட்பு பணியை இன்றுடன் முடித்துக் கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
ஏமனில் இருந்து தங்களை மீட்கும் படி இதுவரை 4100 இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 4000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவீடன் உள்ளிட்ட 26 நாடுகள் மீட்பு பணியில் இந்தியாவின் உதவியை நாடியிருந்தன. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 26 நாடுகளை சேர்ந்த 232 வெளிநாட்டினரை இந்திய மீ்ட்பு படை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.