புதிதாக சேரும் ஊழியர்களின் பி.எப்-புக்கு அரசின் பங்களிப்பு 12% - பட்ஜெட் அறிவிப்பு
புதிய ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அரசின் பங்களிப்பாக 12சதவீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி : புதிய ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அரசின் பங்களிப்பாக 12சதவீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெண்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் ஈபிஎஃப் தொகையானது 12 சதவீதத்தில் அல்லது 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுவதாக அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் சுய சார்பாகவே வாழ நம்பிக்கை அளித்தது ஒய்வூதியம். பணிஓய்வுக்கு பின்னர் கவுரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தரவாதம் அளித்தது. அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் தனது வாழ்வில் முதுமை காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்புகளிலிருந்து மீளவும், வறுமையை எதிர்த்து போராடவும் வழங்கப்படுவதுதான் ஓய்வூதியம்.
1995-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசே அளித்து வந்தது. ஓய்வுக்கு முன்னரான ஐந்து ஆண்டு சம்பள சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. பின்னர் பணியாளரின் ஓய்வூதியத்தை பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டமாக மத்திய அரசு மாற்றியமைத்தது.
1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சட்டத் திருத்தத்தின்படி பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1999,2004 எல பல்வேறு கட்டங்களாக புதிய ஓய்வூதிய திட்ட பலன்களை அளிப்பதில் பல நடைமுறைகளை அரசு கொண்டு வந்தது.
குறிப்பாக 2004 ம் ஆண்டுக்கு பின்னர் மத்திய அரசுப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும். நிதிச்சுமையை குறைக்கும் விதமாக புதிய ஓய்வூதிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஈபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இனி அரசின் அனைத்துத் துறைகளைச் சார்ந்த புதிய ஊழியர்களுக்கு அரசு 12 சதவீத பங்களிப்பை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெண்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் ஈபிஎஃப் தொகையானது 12 சதவீதத்தில் அல்லது 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது, இதனால் முதல் 3 ஆண்டுகள் பணியில் சேரும் பெண் ஊழியர்கள் பிடித்தம் போக கூடுதல் சம்பளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும். நவம்பர் 2017ம் ஆண்டு கணக்கின்படி 18 முதல் 25 வயதில் 36.8 லட்சம் புதிய ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்னர் என்றும் அருண்ஜேட்லி கூறினார்.