குஜராத்தில் பெரு மழை.... கரைபுரண்டோடும் வெள்ளம்- 25,000 பேர் பாதுகாப்பாக மீட்பு- மோடி இன்று ஆய்வு!
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 25,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
டெல்லி: குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 25,000 பேரை பாதுகாப்பாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
வடமாநிலங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 வாரங்களாக இடைவிடாது மழை பெய்கிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பெரும் பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. அகமதாபாத், பதான், பனாஸ் கந்தா ஆகியவற்றில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இதுவரை 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பனாஸ்கந்தா மாவட்டத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி, சிரோகி, ஜலோர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வெள்ள பாதிப்புகளால் சிக்கியுள்ள மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்னும் 4 நாள்களுக்கு கன மழை பெய்யக் கூடும் என்ற அபாய எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று ஆய்வு செய்கிறார்.