குறுகலான சந்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்.. வயிற்றில் சொருகிய ‘அடிபம்பு’ கைப்பிடி.. கொடூரம்!
அமராவதி: ஆந்திராவில் குறுகலான தெருவில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞரின் வயிற்றில் அடிபம்பின் கைப்பிடி அப்படியே சொருகி நின்ற சம்பவம் காண்பவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.
வயிற்றை கிழித்துக் கொண்டு உள்ளே சொருகி இருந்த அடி பம்ப் கைப்பிடியை, துடிக்க துடிக்க ரத்தமும் சதையுமாக வெல்டிங் கருவி மூலம் பொதுமக்கள் வெட்டி எடுத்தனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர் இனி வாழ்நாளில் பைக் ஓட்டவே மாட்டேன் என அரைமயக்க நிலையிலும் புலம்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமனாகும் 'வேகம்'
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் மத்தியில் பைக்கில் வேகமாக செல்லும் மோகம் அதிகரித்துள்ளது. பைக்கில் வேகமாகச் செல்வதால் தன்னை மற்றவர்கள் ஹீரோவாக பார்ப்பார்கள் என்ற தவறான புரிதலும் அவர்கள் மனதில் வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில், சாலையில் இவ்வாறு வேகமாக செல்பவர்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் தான் பணயம் வைக்கிறார்கள் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை. மேலும், யூடியூபர்கள் சிலரும் தங்கள் பங்குக்கு இவர்களை உசுப்பேற்றி விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திராவில் பகீர்
இதனால் அதிவேகமாக சென்று 20 வயதை தாண்டுவதற்குள்ளாகவே அகால மரணம் அடையும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பைக்கில் வேகமாக செல்வது எப்படிப்பட்ட ஆபத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதற்கு ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம் உதாரணமாகி உள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கானிகிரி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23). இவர் கல்லூரி முடித்துவிட்டு நண்பர்களுடன் பைக்கில் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வயிற்றில் சொருகிய அடிபம்பு
இதனிடையே, கடந்த மாதம் இவர் தனது தந்தையிடம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள பைக்கை அடம்பிடித்து வாங்கியுள்ளார். பைக் கையில் வந்ததில் இருந்து அடிக்கடி நண்பர்களுடன் ரேஸ் செல்வது, எங்கு சென்றாலும் குறைந்தது 90 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பரை பார்ப்பதற்காக ஒரு குறுகலான தெருவில் அதிவேகத்தில் பைக்கை ஓட்டி வந்துள்ளார் நாகராஜ். இதில் திடீரென நிலைதடுமாறிய அவர், பைக்குடன் பறந்து சென்று விழுந்திருக்கிறார். அப்போது சாலையோரத்தில் இருந்த அடிபம்பின் கைப்பிடி அவரது வயிற்றில் அப்படியே சொருகியது.

கதற கதற 'வெல்டிங்'
இதனால் வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வர, நின்றபடியே வலியில் அலறி துடித்துள்ளார் நாகராஜ். இவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவரை சிலர் பிடித்து பின்னால் இழுக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, அங்கிருந்த வெல்டரை வரவழைத்து பைப்பை வெட்டி எடுத்து இளைஞரை மீட்டனர். இதில் கதறி துடித்த இளைஞர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவர் வயிற்றுக்குள் இருந்த மீதி கைப்பிடியை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications