கல்யாணத்துக்கு கூப்பிட்டது ஒரு குத்தமா.. மணமகனிடம் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்ட நண்பர்!
சொன்ன நேரத்தைவிட முன்கூட்டியே மாப்பிள்ளை அழைப்பை நடத்தியதற்காக, மணமகனிடம் ரூ. 50 லட்சம் நஷ்டஈடாக கேட்டு நண்பர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்துவார்: உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை முன்கூட்டியே நடத்தி, தன்னை ஏமாற்றி விட்டதாக மாப்பிள்ளை மீது அவரது நண்பர் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
இந்திய திருமணங்கள் பல்வேறு சடங்குகளுக்குப் பேர் போனவை. என்னதான் முன்கூட்டியே திட்டமிட்டாலும், மற்ற சடங்குகளால் முகூர்த்த நேரத்திற்குள் திருமணத்தை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து, திருமணத்தைக் கண்ணாறக் கண்டு, உறவினர்களும், நண்பர்களும் மணமக்களை வாழ்த்தி விட்டுச் செல்வார்கள். இதைத்தான் நாம் வழக்கமாகப் பார்த்திருப்போம்.
ஆனால், அதெப்படி நான் வருவதற்குள் மாப்பிள்ளை ஊர்வலத்தை நடத்தி முடிக்கலாம்.. இது எனக்கு மிகப் பெரிய அவமானம் என மணமகனின் தோழன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கதையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
கொடுமையிலும் கொடுமை! டிராக்டர் வாங்க கடன் வாங்கியது ஒரு குத்தமா! நடுத்தெருவில் விவசாயி குடும்பம்!
ஹரித்துவார் திருமணம்
உத்தரப்பிரதேசத்தில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. ஹரித்துவார் மாவட்டத்திலுள்ள பஹதுராபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக தனது நண்பர் சந்திரசேகர் என்பவரை, நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க உதவி கோரியிருந்தார் ரவி.
மாப்பிள்ளை அழைப்பு
அவரும் ரவியின் திருமணத்திற்கு தங்களது நண்பர்களை அழைத்துள்ளார். அப்போது மாப்பிள்ளை அழைப்பு முதல் நாள் மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். சந்திரசேகரின் வார்த்தையை நம்பி, நண்பர்களும் திருமணத்தன்று 5 மணிக்கு அங்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் செல்வதற்கு முன்பே நிகழ்ச்சி முடிந்து விட்டது.
ஏமாற்றம்
இதனால் அந்த இடமே காலியாகக் கிடக்க, உடனடியாக அவர்கள் ரவிக்கு போன் செய்துள்ளனர். அவரும், சீக்கிரமாகவே மாப்பிள்ளை அழைப்பு முன்கூட்டியே முடிந்து விட்டதாகவும், நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சந்திரசேகரிடம் இது பற்றிக் கேட்டுள்ளனர்.
சண்டை போட்ட நண்பர்
இதனால் சந்திரசேகருக்கு ரவி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் கூறிய நேரத்தை விட முன்கூட்டியே எப்படி விழா நடத்தலாம் என சண்டை போட்டுள்ளார். அதோடு இந்தப் பிரச்சினையை அவர் விடவும் இல்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்துள்ளார் சந்திரசேகர்.
இழப்பீடு
தன் நண்பர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக, ரவி மீது அவர் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் தான் அவமானப் பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த புதுமையான வழக்கு அம்மாநில மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.