தலித் குழந்தைகள் எரித்துக்கொலை: சிபிஐ விசாரணைக்கு ஹரியானா முதல்வர் பரிந்துரை
டெல்லி: ஹரியானா மாநிலத்தில், தலித் குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு முதல்வர் கட்டார் பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியை அடுத்து உள்ள சோன்பேட்டில் (ஹரியானா மாநிலம்), உயர்ஜாதி பிரிவினர் சிலர், தலித் பிரிவினர் வீட்டின் மீது தீ வைத்து உள்ளனர். இந்த கோர சம்பவத்தில், வைபவ் என்ற இரண்டரை வயது குழந்தையும், திவ்யா என்ற 11 மாத குழந்தையும் உயிரிழந்தன.
குழந்தைகளின் தந்தை ஜிதேந்தர் மற்றும் தாய் ரேகா ஆகியோர் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஜாதிவெறி சம்பவம் தேசம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து, ஜிதேந்தரின் வீட்டின் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிரியானா மாநில அரசு சார்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹரியானா மாநில காவல்துறை ஏ.டி.ஜி.பி. முகமது அகில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று சிபிஐ விசாரணைக்கு, ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டாரா பரிந்துரை செய்துள்ளார்.