‘பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன்’... உ.பி கவர்னராகிறார் ராம் நாயக்?!
மும்பை: மத்தியில் ஆளும் பாஜக கேட்டுக் கொண்டதிற்கிணங்க, உத்திரப்பிரதேசத்தின் புதிய கவர்னராக சம்மதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ராம் நாயக்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்ததும், காட்சி மாற்றம் நிகழ்வதும் வாடிக்கை தானே.
அந்தவகையில், பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப் பட்ட பல மாநில கவர்னர்கள் ராஜினாமா செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.
இதற்கிடையே கடந்த சில மாதமாக உத்திரப்பிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து, அங்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் அம்மாநில கவர்னராக இருந்த பி.எல். ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பதவிக்கு அப்பதவிக்கு முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ராம் நாயக் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதி படுத்துவது போல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ராம் நாயக்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
சம்மதம்...
பா.ஜனதா கட்சியில் இருந்து உ.பி. கவர்னர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கப்பட்டதற்கு. அதற்கு நானும் சரி என்று கூறினேன். எனினும், இதுவரை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை.
சரியான தேர்வு...
சரியான நேரத்தில் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து கட்சிப்பணியில்...
1999-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மாநில அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதுமட்டுமல்லாமல் பா.ஜனதா கட்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
சவாலான பணி...
மாநில கவர்னர் பதவி என்பது எனக்கு சவாலானது. இதற்கு முன்பும் நான் சவாலான பணிகளை செய்திருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.