மோடி இந்த நாட்டிற்கே பிரதமராக செயல்பட வேண்டும்: சீனியர் வழக்கறிஞர் நாரிமன் அறிக்கை
டெல்லி: மோடி இந்த நாட்டின் பிரதமராக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ்.நாரிமன் தெரிவித்துள்ளார்.
சாமியார் ராம் ரஹிம் பாலியல் வழக்கில் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பெரும் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இதில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகின. 31 பேர் கொல்லப்பட்டனர்.
ஹைகோர்ட் கோபம்
கலவரம் தொடர்பாக தனது அதிருப்தியை ஹரியானா-பஞ்சாப் ஹைகோர்ட் வெளிப்படுத்தியிருந்தது. சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஹரியானாவில் ஆளும் கட்டார் அரசு, கலவரக்காரர்களிடம் சரண் அடைந்துவிட்டதாக ஹைகோர்ட் சீறியது.
மோடி மீது சீற்றம்
அதேநேரம், மோடி அரசையும் ஹைகோர்ட் வாட்டி வதக்கிவிட்டது. மோடி ஒரு கட்சிக்கு பிரதமர் கிடையாது. ஹரியானா, பஞ்சாப்பை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மத்திய அரசு நடத்தக்கூடாது. மோடி இந்த நாட்டிற்கே பிரதமர் என்பதை அறிய வேண்டும் என கூறினர் நீதிபதிகள்.
வரவேற்பு
இதுகுறித்து நாரிமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரியானா ஹைகோர்ட்டின் முழு பெஞ்ச் நீதிபதிகளுக்கு இதயப்பூர்வ வாழ்த்துக்கள். ஓபன் கோர்ட்டில், தங்கள் அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
பிரதமர், முதல்வர்
பிரதமர் என்பவர் ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் பிரதமர் கிடையாது. இந்தியாவுக்கான பிரதமராக செயல்பட வேண்டும். அதேபோலத்தான் முதல்வரும் தான்சார்ந்த கட்சிக்கான முதல்வர் கிடையாது. அவர் முழு மாநிலத்திற்குமான முதல்வர்.
ஜனநாயகம்
பெரிய பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் மீதான பொறுப்புகளில் இருந்து தப்பிக்கவே பார்க்கிறார்கள். ஜனநாயக நாடு என்பதில் மக்கள் பெருமை கொண்டுள்ளோம். அதை நிரூபிப்பது இவர்கள் கடமை. தவறக்கூடாது என்று நாரிமன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாரிமன்தான் காவிரி வழக்கில் கர்நாடக தரப்பில் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.