ஆந்திராவில் தீயாய் தகிக்கும் வெயில்... 113 டிகிரி வெயிலுக்கு 110 பேர் பலி
நகரி: ஆந்திராவில் வெயிலின் தாக்கம் தாங்காமல் இதுவரை 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தரி முடிவடைந்த பிறகும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகலில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆந்திராவின் கிழக்கு கோதாவர் மாவட்டம் துணியில் அதிகபட்சமாக 113 டிகிர் வெயில் பதிவானது. அதற்கடுத்தபடியாக காகிநாடாவில் 111 டிகிரியும். மசூலிபட்டினத்தில் 109 டிகிரியும், ஓங்கோலில் 104 டிகிரியும், திருப்பதியில் 104 டிகிரியும் வெயில் கொளுத்தியது.
இதனால், வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை 110 பேர் பலியாகியுள்ளனர். இதில், ஸ்ரீகாகுளத்தில்தான் அதிக எண்ணிக்கையாக 40 பேரும், கிழக்கு கோதாவரியில் 34 பேரும், விஜயநகரத்தில் 16 பேரும், மேற்கு கோதாவரியில் 12 பேரும், விசாகப்பட்டினத்தில் 8 பேரும் கிருஷ்ணா மாவட்டத்தில் 9 பேரும் பலியாகி உள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்களும், குழந்தைகளும் என கூறப்படுகிறது. அனல்காற்று காரணமாக அதிக வியர்வை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் வெயிலின் தாக்கம் தொடர்வதற்கு, தென்மேற்கு பருவகாற்று தமிழ்நாட்டுடன் நின்றுவிடுவதே காரணமாகச் சொல்லப் படுகிறது. மேலும், ராஜஸ்தானில் இருந்து வீசும் தரைக் காற்றால் ஆந்திராவில் அனல் அடிப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.