கர்நாடக இடைத்தேர்தல்: இரு தொகுதிகளில் பாஜக வெற்றி.. ஆளும் காங்கிரசுக்கு ஒரே தொகுதி!
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஒரு தொகுதி மட்டும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது.
பெங்களூர் நகரிலுள்ள ஹெப்பால் தொகுதி, பீதர் மற்றும், தேவதுர்கா ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும், எம்.எல்.ஏக்கள் மறைவையடுத்து, கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஹெப்பால் மற்றும் தேவதுர்கா தொகுதிகளில் பாஜகவும், பீதர் தொகுதியில், காங்கிரசும் ஆரம்பம் முதலே முன்னணி வகித்து வந்தன.
ஹெப்பால் பாஜக வசமும், பீதர் எடியூப்பா நடத்தி வந்த கர்நாடக ஜனதா கட்சி வசமும் இருந்த தொகுதிகளாகும். தேவதுர்கா காங்கிரஸ் வசம் இருந்தது. இந்நிலையில், மதியம் 2 மணியளவில் முழு ரிசல்ட் வெளியானது.
ஹெப்பால் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணசாமி, 19,149 வாக்குகள் வித்தியாசத்திலும், தேவதுர்காவில், பாஜக வேட்பாளர் சிவனகவுடா நாயக் 16,871 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினர். பீதர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரஹீம்கான், 22,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேநேரம், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சி 3 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர் வாங்கும் மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கை கூட பெற முடியாத வேட்பாளர் டெபாசிட் இழந்தவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலை பொறுத்தளவில், ஏற்கனவே தன்வசம் இருந்த ஒரு தொகுதியை காங்கிரஸ் இழந்துள்ளது. பதிலாக, பாஜகவசமிருந்த ஒரு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேநேரம், கூடுதலாக ஒரு தொகுதியை பாஜக வென்றுள்ளது.
தமிழகத்தை போலன்றி, ஆளும் கட்சிகளின் தலையீடு இன்றி, இடைத்தேர்தல்கள், கர்நாடகாவில் எப்போதுமே நியாயமாக நடைபெறும். இம்முறையும், அதுபோல நடைபெற்றுள்ளது என்பதற்கு, எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றுள்ளது சாட்சி.