இந்தியா ஒரு இந்து நாடு: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் மீண்டும் சர்ச்சை!
மும்பை: இந்தியா ஒரு இந்து நாடு, இந்துத்வா அதன் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜன்மஸ்தமி நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா என்பது அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய ஒரு மதம்.
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.
அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல் அவர்கள் இறந்த பிறகு உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.
ஏற்கெனவே சர்ச்சை
‘இந்தியா, இந்துக்களின் நாடு' என்று மோகன் பகவத் கூறி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியர்களின் கலாசார அடையாளமே இந்து மதம் தான். தற்போது வாழும் இந்துக்கள் அனைவரும் மிக பெரிய கலாசாரத்தின் சுவடுகள். ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்கள் ஆங்கிலேயர்களாகவும், ஜெர்மனியர்களின் சந்ததிகள் ஜெர்மனியர்களாகவும் இருக்கும்போது இந்துக்களின் வழித்தோன்றல்கள் ஏன் இந்துஸ்தானில் வாழ்ந்து வருவோர் இந்துக்களாக இருக்க கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications