ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
பொருளாதார கண்ணோட்டத்தில், ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாகவும், நிலையான வளர்ச்சிக்கு உந்துதலாகவும் உள்ளது.
புவனேஸ்வர் : இரண்டாவது முறையாக ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை ஒடிசா நடத்துவது நம் அனைவருக்கும் பெருமையளிக்கிறது. ஒடிசா நீண்ட காலமாக பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்ட மாநிலம். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக அனைத்து துறைகளிலும் சிறப்பான மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சமீபத்தில் முடிவடைந்த 'மேக் இன் ஒடிசா கான்க்ளேவ்' ரூ.10.5 டிரில்லியன் முதலீட்டை பெற்றுத் தந்துள்ளது. இது முந்தைய முதலீடுகளை விட மிகப்பெரிய வளர்ச்சி. இதுவே பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.
நமது மாநிலத்தின் தொழில் வளம் தவிர, உலக அரங்கில் நம்மை இடம்பெறச் செய்தது விளையாட்டுதான். முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், நம் மாநிலம் ஏராளமான மறைமுக பலன்களைப் பெறுகிறது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மற்றும் FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளை ஒடிசா முன்பு நடத்தியுள்ளது.
ஒடிசா ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கும் சூழலில், புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பெரியளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் மூலம் நமது பொருளாதாரம் புது வலிமை பெற்றுள்ளது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டி வளர்ச்சிக்கு உதவிகரமாகவும், நிலையான வளர்ச்சிக்கு உந்துதலாகவும் உள்ளது. ஒடிசாவுக்கு உலகளாவிய புகழைத் தருவதைத் தவிர, இந்தியாவில் ஹாக்கியின் பிரபலத்தை அதிகரிக்கவும் இந்தப் போட்டி உதவுகிறது.
உணவு மற்றும் குளிர்பானம் (F&B), ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவை இந்த மெகா விளையாட்டு நிகழ்வால் பயனடைந்த முக்கியமான வணிகங்கள் ஆகும். விருந்தோம்பலின் வளர்ச்சியானது, ஹோட்டல்களின் எண்ணிக்கை மற்றும் இந்த சந்தையில் நுழையும் பிராண்டுகளின் அதிகரிப்பில் எதிரொலிக்கிறது.
நடந்து வரும் ஒடிசா ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையைக் காணச் செல்லும் பயணிகளுக்காக ஒடிசா ஏற்கனவே புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா இடையே ஷட்டில் விமான சேவையை தொடங்கியுள்ளது. இந்த ரூட் இப்போது மிகவும் பரபரப்பாக இயங்குகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றி மாநில வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான சேவை வாரத்தில் ஏழு நாட்களும் இயங்குகிறது. இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தி, இப்பகுதி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. முன்னதாக, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்திற்கும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்திற்கும் இடையிலான பயண நேரம் ஒன்பது மணிநேரமாக இருந்தது. இப்போது விமானம் மூலம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் இந்த இடங்களுக்கு பயணம் செய்யலாம். உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை ரயில்வே, புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா இடையே இரண்டு புதிய சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது.
ரூர்கேலாவில் புதிய அதிநவீன பிர்சா முண்டா ஸ்டேடியத்தை ஒடிசா அரசு கட்டியுள்ளது. இது ஹாக்கி ரசிகர்களுக்கான அதிக இருக்கைகளை கொண்ட ஸ்டேடியம். புவனேஸ்வரில் உள்ள மைதானத்தை புதுப்பித்து அரங்கை அழகுபடுத்தியது. விமான நிலையம், ஹோட்டல்கள் மற்றும் நகரின் சாலைகள் என பல்வேறு பகுதிகளும் கூடுதலாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரூர்கேலா 'ஸ்டீல் சிட்டி' என்று அழைக்கப்படுவதால், உள்ளூர் பொருளாதாரத்தில், குறிப்பாக எஃகு, இரும்பு மற்றும் சிமென்ட் துறைகளில் வளர்ந்து வரும் சந்தையை வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை நடத்துவதன் மூலம் ஒடிசா பெறும் மென்மையான ஆற்றல் முயற்சியும் மதிப்புள்ளது.
உலகக் கோப்பை முடிவடைந்து பார்வையாளர்கள் வெளியேறிய பிறகு, உள்கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள முதலீடு மற்ற தேசிய மற்றும் சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் ரூர்கேலா இந்தியாவின் ஹாக்கி தலைநகரமாக உருவாகும்.
இந்த உலகக்கோப்பை போட்டியை ஒடிசா அரசு வளர்ச்சித் திட்டங்களில் சேர்ப்பதன் மூலம், ஒடிசா இந்த உலகக் கோப்பையை பொருளாதார மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலுக்கான வாய்ப்பாகவும், அதன் கலாச்சாரத்தை உலக அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகிறது. இந்தியாவில் விளையாட்டு சுற்றுலாத் துறையில் ஒடிசா ஒரு முன்னோடியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இங்குள்ள சுற்றுலா தலங்கள் அதிகமானோரால் விரும்பப்படக்கூடியவை. பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதன் மூலம் ஒடிசா தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஹாக்கி ரசிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒடிசா அரசு டாட் ஃபெஸ்ட்டையும் நடத்துகிறது. 1860களின் பிற்பகுதியிலிருந்து 2023 வரையிலான புவனேஸ்வரின் புகைப்படங்களைக் காண்பிக்கும் ஒரு நைட் பஜார் புகைப்படக் கண்காட்சி - 'Sebbe O Ebbe' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் 16 நாடுகளின் உணவு வகைகளைக் கொண்ட சர்வதேச உணவுத் திருவிழா, தலைநகரைச் சுற்றிலும் சுற்றுப்பயணம் மற்றும் பு-ஃபெஸ்டோ அல்லது கதை சொல்லும் திருவிழாவும் நடத்தப்படுகிறது.
ஒடிசா மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும், ஹாக்கி விளையாட்டும் இதன் மூலம் பயனடைகின்றன. இன்று ஹாக்கி போட்டியை காண மக்கள் வரிசையில் நின்கின்றனர். அனைவரும் வெற்றிகளைக் கொண்டாடி வருகின்றனர். இந்த உலகக் கோப்பை உண்மையான சமூக, மனிதநேய, பொருளாதார மரபுகளை வழிநடத்திச் செல்வதை உறுதி செய்வதில் ஒடிசா உறுதியாக உள்ளது. மேலும் இந்த உலகக்கோப்பை ஒடிசா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றிலும் ஒரு வரலாற்றுத் தருணமாக நினைவுகூரப்படும்.
(ஆசிரியர்: மனோஜ் மிஸ்ரா - செயலாளர், எலக்ட்ரானிக்ஸ் & ஐடி மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம். மற்றும் ஒடிசா முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி. இவரை [email protected] வாயிலாக தொடர்பு கொள்ளலாம்).