சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்ததில் லாஜிக் இல்லை: கர்நாடகா வாதம்
டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும், அன்பழகன் தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் முதல், கர்நாடக தரப்பு வாதம் தொடங்கியுள்ளது. கர்நாடக தரப்பு வழக்கறிஞர் தவே வாதிட்டு வருகிறார்.
தவே வாதத்தில் இருந்து சில பகுதிகள்: ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது சந்தேகத்திற்கிடமின்றி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஹைகோர்ட் தனது தீர்ப்பில், ஜெயலலிதா வங்கிகளில் பெற்ற கடன்களை வருவாய் என காண்பித்து, ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூற முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
கடன் திருப்பி செலுத்தப்படக் கூடியது என்பதால் அதை வருவாய் கணக்கில் சேர்த்தது தவறானது. ஜெயலலிதா உள்ளிட்டோரை ஹைகோர்ட் விடுதலை செய்துள்ளது என்பது, லாஜிக் இல்லாதது. நீதி பரிபாலனத்தை சுப்ரீம்கோர்ட் காத்து நிற்க வேண்டும். இவ்வாறு வாதம் நடைபெற்றது.