ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றது எப்படி? 'தஞ்சாவூர்' முகமது நசீரிடம் தொடர்ந்து விசாரணை!
டெல்லி: உலகின் மிக பயங்கரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது நசீர் எப்படி சேர முயற்சித்தார் என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியா, ஈராக்கின் பெரும்பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனப்படுத்தியவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து அதை வலுப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஐ.எஸ். இயக்கத்தின் டி சர்ட்டுகளை அணிந்து சமூக வலைதளங்களில் அதனை தமிழக இளைஞர்கள் சிலர் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது.
நாடு கடத்தல்
இதன் பின்னர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்தவர்கள் பிடிபட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜா ஃபக்ருதீன், சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி விசா பெற்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சிரியாவுக்கு போய் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துவிட்டார். அவர் தற்போதும் சிரியாவில் இருப்பதாக நம்புகிறோம் என்கின்றனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள்.
துருக்கி வழியாக
அண்மையில் சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த இளைஞர்கள் துருக்கி வழியாக சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்தபோது அங்கு பிடிபட்டு நாடு கடத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் சூடான் வழியாக ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் முகமது நஷீர் கடந்த வாரம் சூடானில் பிடிபட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரை டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் நஷீர்
முகமது நஷீர் முதலில் சென்னையைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகி இருந்தது. தற்போது நஷீர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஐ.எஸ். கட்டளை
அவர் ஓமனில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து சூடானுக்கு சென்று, லிபியா வழியாக ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் துருக்கி வழியாக சிரியாவுக்குள் வர வேண்டாம் என்றும் சூடான், லிபியா வழியாக சிரியாவுக்குள் நுழையுமாறும் ஐ.எஸ். இயக்கம் நஷீருக்கு கட்டளை பிறப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலமாக ஐ.எஸ். இயக்கத்தினர் ஆட்சேர்ப்பதில் புதிய வழிமுறைகளை பின்பற்றி வருவதும் உறுதியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை முகமது நஷீரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.