48 வயதில் வழக்கு.. இன்று 66 வயதாகிறது.. கருணை காட்டுங்கள்.. உருக்கமாக கோரிய ஜெ.!
சென்னை: என்னுடைய 48 வயதில் வழக்குத் தொடர்ந்தனர். இன்று எனக்கு 66 வயதாகிறது. எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கடைசி முயற்சியாக பெங்களூர் சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால் அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கூட இல்லையாம் நீதிபதி குன்ஹா.
18 வருடமாக நீடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் முடித்துள்ளார் குன்ஹா.
இந்த ஏழு நிமிடத்தில் ஜெயலலிதாவின் உருக்கமான கோரிக்கையும் இடம் பெற்றுள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
பல மணி தவிப்பில் மக்கள்
ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பை அறிய செப்டம்பர் 27ம் தேதி காலை முதல் பல மணி நேரமாக மக்களும், மீடியாக்களும், அரசியல் கட்சியினரும் தவிப்புடன் காத்திருந்தனர்.
அந்த 7 நிமிடங்கள்..!
ஆனால் கோர்ட்டுக்கு உள்ளே வெறும் 7 நிமிடங்களில் எல்லாம் முடிந்து போயிருக்கிறது. ஜெயலலிதாவின் தலையெழுத்தை அந்த 7 நிமிடத்திற்குள்ளாகவே மாஜிஸ்திரேட் குன்ஹா எழுதி முடித்துள்ளார்.
இத்தனை பேர்தான் உள்ளே
தீர்ப்பின்போது மாஜிஸ்திரேட் குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், 13 எதிர்த் தரப்பு வக்கீல்கள், 2 அரசுத் தரப்புவக்கீல்கள், திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் வக்கீல்கள் இருவர் மற்றும் கோர்ட் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
கோர்ட் கூண்டில் ஜெயலலிதா
குற்றம்சாட்டப்பட்டோர் நிற்க வைக்கப்படும் கூண்டில் ஜெயலலிதா இருந்துள்ளார். ஆனால் அவர் உட்கார்ந்தபடி தீர்ப்பைக் கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடதுபுறம் மற்ற மூவரும் அமர்ந்துள்ளனர்.
11.07க்கு தீர்ப்பு
சரியாக 11.07 மணிக்கு தீர்ப்பை அறிவித்துள்ளார் மாஜிஸ்திரேட் குன்ஹா. பின்னர் 1 மணிக்கு தண்டனை தொடர்பான வாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதிர்ச்சியில் உறைந்த ஜெயலலிதா
குற்றவாளி என்று நீதிபதி சொன்னதுமே அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ஜெயலலிதா. மற்ற மூவரின் நிலையும் அதேதான்.
இளவரசி மட்டும் அழுதார்
இவர்களில் இளவரசி மட்டுமே அழுதுள்ளார். தீர்ப்பைச் சொன்னதும், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் அருகில் உள்ள அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
ஏதாவது பேச விரும்புறீங்களா...!
1 மணிக்கு மீண்டும் கோர்ட் கூடியபோது ஜெயலலிதாவிடம், ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று மாஜிஸ்திரேட் குன்ஹா கேட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் வழக்கு
இதையடுத்து பேசிய ஜெயலலிதா, இது திமுகவினரால் போடப்பட்ட அரசியல் பழிவாங்கல் வழக்கு. இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது.
66 வயதாகிறது.. கருணை காட்டுங்கள்
எனது 48வது வயதில் இந்த வழக்கைப் போட்டனர். இப்போது எனக்கு 66 வயதாகிறது. எனது உடல் நிலை மோசமாக உள்ளது. எனக்கு கருணை காட்டுங்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இரக்கமே காட்டாத மைக்கேல் குன்ஹா
ஆனால் மாஜிஸ்திரேட் குன்ஹா இரக்கம் காட்டும் மன நிலையில் இல்லை. நான்கு பேருக்கும் தலா 4 வருட தண்டனையை அறிவித்து அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டு விட்டார்.