குஜராத் முதல்கட்ட தேர்தல்.. போன முறையை விட இந்த முறை மந்தம்தான்.. இன்று பதிவான வாக்கு விவரம்
காந்திநகர்: குஜராத்தில் 19 மாவடங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைந்துள்ளது.
மொத்தமாக இதுவரை 57% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கிராமப்புறங்களில் அதிகபட்ச வாக்குகளும், நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 69.01% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை எதிர்பார்த்ததைப் போலவே வாக்கு பதிவு குறைந்துள்ளது.

எங்கு அதிகம்?
மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் முழுமையாக களமிறங்கின. ஆம் ஆத்மியை பொறுத்த அளவில் 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால் ஒரு தொகுதியிலிருந்து வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதனால் ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 14,382 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்போதுவரை 57% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்குறிப்பிட்டதைப்போல கிராமப்புறங்களில் அதிக அளவிலும், நகர்ப்புறங்களில் குறைவான அளவிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு
தேர்தலுக்கு முன்னதாக பாஜக வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளன. மற்றபடி பெரிய அளவில் எந்த அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் மீண்டும் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் எனும் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி சரிந்திருந்த நிலையில், படிதார் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்திருப்பது கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 15% பேர் இச்சமூகத்தை சார்ந்தவராவார்கள். அதேபோல தாகூர் சமூகத்தினரும் 2017 தேர்தலுக்கு முன்னர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இந்த முறை அந்த சமூகத்தின் தலைவர் பாஜகவில் இணைந்ததால் பாஜவின் பலம் கூடியுள்ளது.

7வது முறை
இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றிவிட்டது எனில் சிபிஎம் கட்சியின் சாதனை சமன் செய்யும். அதாவது மேற்கு வங்கத்தில் கடந்த காலத்தில் சிபிஎம் 7 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. இதுவரை வேறெந்த கட்சியும் அப்படி இருந்ததில்லை. ஆனால் குஜராத்தில் பாஜக 6 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 7வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்து சிபிஎம் சாதனையை சமன் செய்யும். அதேபோல இந்த தேர்தல் எதிர்வரும் 2024 நாடளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதால் இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

வாக்கு வங்கி
ஆனால், வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையுயர்வு ஆகியவை பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்கும். இதில் மோர்பி பாலம் விபத்தும் தற்போது புதியதாக இணைந்திருக்கிறது. அதேபோல மாநிலத்தில் எந்த ஒரு தொகுதியிலும் பாஜக இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கவில்லை. இதுவும் காங்கிரசுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் காங்கிரஸ் சார்பில் 6 இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக நிற்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த பலவீனங்களிலிருந்து தப்பிக்க பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் வரை பிரசாரத்தில் பாஜக களம் இறக்கியுள்ளது.

பிரசாரம்
காங்கிரஸை பொறுத்த அளவில், இந்த அளவுக்கு பிரமாண்டமாக பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை என்றாலும், பாரத் ஜடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த ராகுல் காந்தியை அழைத்து வந்து பேரணிகளையும், பொதுக்கூட்டத்தையும் கட்சி நடத்தியுள்ளது. ஆனால் பிரமாண்டங்களை மட்டுமே இந்த முறை கட்சி நம்பியிருக்கவில்லை. மாறாக உள்ளூர் தலைவர்களை வாக்கு சேகரிக்க களமிறக்கியது. அவர்கள் வீடு வீடாக சென்று காங்கிரஸின் 8 அம்ச வாக்குறுதிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆம் ஆத்மியை பொறுத்த அளவில், காங்கிரஸை போல உள்ளூர் அளவில் பலம் இக்கட்சிக்கு இல்லை. ஆனால் பாஜகவை போல பஞ்சாப் மற்றும் டெல்லி முதலமைச்சர்களை கட்சி பிரசாரத்தில் இறக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications