தலித் மாணவர் தற்கொலையால் ஹைதராபாத் கொந்தளிக்க... கூலாக ஷாப்பிங் போன முதல்வர் சந்திரசேகரராவ்
ஹைதராபாத்: தலித் மாணவர் தற்கொலையால், ஐதராபாத் நகரமே கொந்தளிப்பில் இருந்த நேரத்தில், தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ், நூற்றுக்கணக்கான ஆடைகளை எடுக்க 'ஷாப்பிங்'கில் பிசியாக இருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹைதராபாத் மத்திய பல்கலையில் படித்த தலித் மாணவர், தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக, ஹைதராபாத்தில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம், உண்ணாவிரதம், பஸ் மறியல் போன்றவற்றால், ஹைதராபாத் நகரமே, கொந்தளிப்பில் உள்ளது. நிலைமையை சமாளிப்பதற்காக, நேற்று முன்தினம், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பதற்றமான நேரத்தில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், முதல்வர் சந்திரசேகர ராவ், புதிய உடைகளை வாங்கினார். இதற்காக, நீண்ட நேரத்தை, அங்கு செலவிட்டார்.
மாணவர் தற்கொலையால் மத்திய அரசுக்குத்தானே சிக்கல் நமக்கு எதுவும் இல்லையே என்று நினைத்தாரோ என்னவோ முதல்வர் கூலாக ஷாப்பிங் செய்தார் என்கின்றனர். முதல்வர் சந்திரசேகர ராவ் கதர் சட்டை, பேன்ட் அணியும் பழக்கம் கொண்டவர். இவர், கடந்த 1990ம் ஆண்டு முதல், ஹைதராபாத்தில் ஹைதர்கூடா பகுதியில் உள்ள ‘ஸ்ரீ சாய் காதி வஸ்திராலயா' எனும் கதர் ஆடை கடையில் துணி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அந்த கடைக்கு சென்று தனக்காக 100 வெள்ளை நிற கதர் சட்டையும், 100 வெள்ளை நிற கதர் பேன்ட்டும் எடுத்தார். பின்னர் இதற்காக இவர் ரூ. 1 லட்சம் முன் பணம் வழங்கினார். மீதி பணத்தை பேன்ட், சட்டை தைத்து கொடுத்த பின்னர் வழங்குவதாக கூறி சென்றார்.
போராட்ட களத்தில், ஹைதராபாத் கொந்தளித்திருந்த நேரத்தில், முதல்வர், ஜாலியாக, ஷாப்பிங் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.